0

வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் அதிமதுரத்தில் நிரம்பியுள்ளது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து, இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும். அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு, 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கை நிவர்த்தி செய்துவிடலாம்.



அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து, உலர்த்தி வைத்துக் கொண்டு,  பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். அதிமதுரம், தேவதாரம் போன்றவற்றை வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவவலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத் தன்மை நீங்கும். அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.

இலகுவாக மல விருத்தியாகும். சோம்புச் சூரணம், அதிமதுரச்சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும் போது சாப்பிட்டு சுடு தண்ணீரில் சாப்பிட்டால் உள் உறுப்புக்கள் சூடு தணிந்து சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும். போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதி மதுரச்சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலைமயிர் உதிர்தல் இருக்காது. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிடங்கள் சென்ற பின் வடிகட்டி காலை, மாலை இரு வேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்.

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போகசக்தி அதிகரிக்கும். போகசக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும். அதிமதுரத்துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கிவிடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்துவிடும்.


Post a Comment

 
Top