குளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டு வலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு, மெனோபாஸ் என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.
பனிக்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியை சமாளிப்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன்.
உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடு வது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும் வேலையை மூட்டுகள் செய்கின்றன. மூட்டு நாண்களை அளவுக்கு அதிகமாக உபயோகித்தல் மற்றும் கிழிந்து போவதால் மூட்டு நாண் பிடிப்புகள் ஏற்பட்டு வலியை ஏற்படுத்துகிறது.
முழங்கால் மூட்டு மற்றும் பாதத்திலும் இது போன்ற பிரச்னை ஏற்படலாம். மூட்டுப்பை அலர்ஜி ஏற்படும் போதும் மூட்டுப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
எலும்பு, தசைநாண் மற்றும் தசை ஆகியவை மூட்டுகளுடன் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. மூட்டுகளின் அசைவால் ஏற்படும் அதிர்வுகளில் இருந்து காக்கும் வேலையை மூட்டுப்பைகள் செய்கின்றன. மூட்டுப் பைகளில் அலர்ஜி ஏற்படுவதால் அசைவு மற்றும் அழுத்தத்தின் போது வலி ஏற்படும். தோள்பட்டை, முழங்கை, இடுப்பு மூட்டுகளில் இந்த அலர்ஜி அதிகளவில் ஏற்படும்.
தசை நார்களில் உண்டாகும் அலர்ஜி காரணமாகவும் மூட்டுகளில் வலி, பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வலியை துவக்கத்தில் கவனிக்காமல் விட்டால் 3 மாதங்களுக்கு பின்னர் உடல் முழுவதும் வலி ஏற்படலாம்.
கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளு டன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. இவர்கள் அதிக பதற்றத்தை விட்டு வேலைகளை நிதானமாக செய்யலாம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதை தவிர்க்கலாம்.

Post a Comment